பந்தார் விரலி

"ஜானகி! என்கிட்ட போடு! நான் பிடிச்சிடுவேன்!"
"அக்கா, அவள் பிடிக்க மாட்டாள்!"
ஜானகி அவளின் ஆசை தங்கையை பார்த்து சிரித்தாள்.
"ஏண்டா மிலி, நீ மட்டும் பிடிச்சிடுவியா?"
மிலியின் குறும்பு மிக்க சிரிப்பு அடங்கி மற்ற தோழிகள் ஜானகியுடன் சேர்ந்து சிரித்தார்கள். அப்பொழுது ஜானகி அவள் கைகளில் மிகவும் வசதியாக உட்கார்ந்திருந்த என்னை பார்த்து சிரித்தாள். என்னை ஒரு முறை தடவி காதருகில் எடுத்துக் கொண்டு சென்றாள்.
"யார் கிட்ட போடுவது, உன்னை? நீயே சொல்லேன்?" என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவளின் அழகான தாமரை கைகளும், சந்தோஷம் மிகுந்த சிரிப்பும், அன்பு பொங்கும் கண்களை விட்டு செல்ல வேண்டாம் என்று தோன்றினாலும் என் கடமை அப்படி இப்படி போட்டு போட்டு விளையாடுவதற்குத்தானே என்று என்னையே தேர்த்திக் கொண்டேன். சிறிது நேரத்தில் மிலியோ மற்ற தோழிகளில் யாராவது ஜானகியிடம் திரும்பியும் தூக்கிப் போடுவார்கள் தானே! 

"ஜானகி, இங்கே!"
ஜானகி திடீர் என என்னை ஒரு குபுக் சிரிப்புடன் மேலே ஓங்கி தூக்கிப் போட்டாள். அப்படியே காற்றில் சுற்றி சுற்றி பறந்து, நந்தவனம், துர்கை அம்மன் கோவில், ஆயுதங்கள் வைக்கும் இடம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தாண்டி பூஜை அறையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நாராயணின் முன் விழுந்து, சிறிது சிறிதாக குதித்து ஒரு பெரிய பெட்டியின் கீழ் சென்று சுவரின்முன் நின்றேன். இருட்டாக இருந்த அந்த இடத்தில் எனக்கு முன் இரண்டு மூன்று கருப்பான்கள் என்னை பார்த்து வியந்துகொண்டே சென்றன. அடேய், பூஜை அறைக்குள்ளும் வந்துவிட்டீர்களா?!
"அக்கா! ஏன் இப்படி தூக்கி போட்டுட்டே அதை?"
"ஜானகியோட கை பலம் அவளுக்கே தெரியலையே!"
தோழிகளின் சிரிப்பு சத்தம் ஒளித்து அவளின் ஒரு சிறிய முனகள் கேட்டது.
"இருங்க, நானே கொண்டு வந்துடறேன்!"

சல், சல் என்ற கொலுசு சப்தம் என் இருட்டு அறையை நெருங்கியது. ஜானகி, என்னை சீக்கிரம் கண்டுபிடித்து, உன் பொன்னான கரங்களால் அள்ளிக்கொண்டு சென்றுவிடேன்!
பூஜை அறைக்குள் அந்த கொலுசு சப்தம் நெருங்கியது. அவளின் பட்டு பாவாடைக் கீழ் அங்கே இங்கே தாவி ஓடி என்னை தேடிக்கொண்டிருந்தவளின் கால்கள் தெரிந்தன. முழு அறையும் தேடி என் முன் வந்து நின்றாள். என்னால் என்ன செய்ய முடியும்?
"எங்க போயிருக்கும்? ஹூம்..." அவளின் பெருமூச்சுடன் கீழே குனிந்தாள். விரிந்த கண்களுடன் பெரிய புன்னகை கலந்த அவளின் முகம் எனக்கு வெளியிலிருந்து வந்த வெளிச்சத்தில் அருளியது!

"ஜானகி! கண்டுபிடிச்சிட்டியா?"
அறை வெளியில் தோழிகளும் மிலியும் வந்து நின்றார்கள். குனிந்து எனக்காக கைகளை எட்டி எடுக்க பார்த்துக்கொண்டிருந்தவளை கண்டு முறைத்தார்கள்.
"ஐயோ, அது கீழே மாட்டிக்குச்சே. இரு, அப்பாக் கிட்ட சொல்றேன்..."
"வேண்டாம், பரவாயில்லை." 
ஜானகி அவசரமாக எழுந்து என் மேல் அழுத்திக் கொண்டிருந்த டப்பாவை வெளியிலிருந்து பிடித்து இழுத்தாள். ஏதோ பொம்மையை இழுத்தது போல் அது வேகமாக சரிந்து எனக்கு சுதந்திரமும் வெளிச்சமும் அளித்தது. 
ஜானகி மெல்ல என்னை எடுத்து அவளின் மென்மையான விரல்களால் வருடினாள். 

"ஜானகி!"
பின்னால் திரும்பி பார்த்தாள். முகத்தில் மிகப் பெரிய கவலையுடன் அப்பா நடந்து வந்தார். அவளின் தோள்களை பிடித்து, கண்ணத்தை தடவினார்.
"இந்த டப்பா..."
"கீழே பந்து மாட்டிக்குச்சுப்பா. உன்னை ஏன் அனாவசியமா படுத்தனும்னு நானே தள்ளிட்டு எடுத்துட்டேன்." என்னை உற்று பார்த்தாள். குறும்புத்தனம் மிகுந்த ஒரு சிரிப்பை என்னிடம் அளித்துவிட்டு, முகத்தில் பொய் வருத்தத்துடன் அவரை ஏறிட்டு பார்த்தாள். "நான் செஞ்சது தப்பா அப்பா?"
வாய் அடைத்து நின்றவர் பதிலாக தலையை ஆட்டியதும் அவளும் மிலியும் தோழிகளும் பொங்கி வழியும் சிரிப்புகளும், எல்லாம் கலந்து வேறு வேறு தாளங்களில் ஓசை செய்த கொலுசுகளின் குலுங்கல்களுடனும் என்னை தூக்கி போட்டு விளையாட தொடங்கினார்கள்.

~ ~ ~

"இங்க என்ன அக்கா செஞ்சிண்டு இருக்கே?"
ஜானகி தன் நாட்டின் மீது ஒரு நிரந்தர நிழலை செலுத்தும் வெள்ளைப் பணி மலைகளை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மடியின் மீது என்னை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது சுற்றி சுற்றி தடவினாள். மிலி வந்து பக்கத்தில் உட்கார்ந்ததும் ஒரு பெருமூச்சு விட்டாள்.
"அவன் யாராக இருப்பானோ."
"யாரு?" மிலி சிரித்தாள். "உன் ஆளா?"
ஜானகி சிரித்தாள். பூஜை அறையை நோக்கி கண் சிமிட்டினாள்.
"அந்த டப்பாவைத்தானே நான் நகர்த்தினேன். என் வருங்கால மாப்பிள்ளைக்கு வில்லை மட்டும் தூக்கிட்டா போதுமா?" 
"போதும் போலிருக்கு." மிலி என்னை வாங்கி அவளின் மடி மீது வைத்து என் மேல் அவளின் தலையை சாய்த்தாள்.
"அது சரி. நீ அப்படி சொல்லிட்டே. 'டப்பாவை தள்ளி வைப்பவர்களுக்குத்தான் பெண்' அப்படின்னு அப்பா அறிவிச்சாருன்னா என்னடா சவால் இது அப்படின்னு நினைச்சு யாரும் கலந்துக்க மாட்டாங்க."

ஜானகி குபுக்கென்று சிரித்தாள். முத்துக்களான அவளின் பற்கள் என்னையும் மிலியையும் பார்த்த பொழுதே சந்தோஷப் படுத்தின. மிலி ஈ என்ற சிரிப்புடன் வந்த ஒரு வித வெறியினால் என்னை வீசினாள். ஜானகி நான் பறப்பதை பார்த்து அவசரமாக நின்றாள். மேலே சுற்றி சுற்றி நந்தவனத்தில் ஒரு முற்செடியில் வந்து விழுந்தேன். பெண்களின் குரல்களும் கொலுசு சப்தமும் நெருங்குகிறதா என்று உற்று கேட்டுப் பார்த்த பொழுது, தெரியாத இரு ஆண் குரல்கள் அந்த பக்கமாக வந்தது. 

"அண்ணா, எங்கே பார்த்தே அவளை?"
"இங்கே தான்! ஒரு மாடியில நின்று கீழே நாம நடந்து போன பொழுது என்னை பார்த்தா! சிரிச்சா! கண் அடிச்சா!"
அந்த இரண்டு குரல்களின் சொந்தக்காரர்களின் கால்கள் புற்கள் வழியாக எனக்கு காட்சி அளித்தன. ஒரு மஞ்சள் நிற ஆடை, ஒரு நீல நிற ஆடை.
"போ அண்ணா! ஆனாலும் அப்பாவையும் அம்மாவையும் விட்டு இருந்த கொஞ்ச நாள்ளையே இப்படி காதல் கீதல்னு அலையரது உனக்கே நல்லா இருக்கா..."
"இளங்கோ, நான் என்னடா செய்வேன்?"
அண்ணனின் கால்கள் என்னிடம் திரும்பின. நெருங்கின. இரண்டு பெரிய விரிந்த இளம் கண்கள், வாழ்க்கையின் அதிசயங்களையும் அழகையும் முழுதாக ரசிக்கும் வியப்பு மிகுந்த கண்கள் என்னை பார்த்து விரிந்தன.

"ஐயோ, எவ்ளோ அழகான பந்து!" 

கருமேகங்களின் நிறத்தை ஒற்ற, நீல நிற மணிபோல் ஜொலித்த ஒரு தாமரைக் கை மெல்ல என்னை விடுவிக்க மேலிருந்து உள்ளே நுழைந்தது.

"அண்ணா பார்த்து! முள்ளு!"
"பரவாயில்லை டா! வேற எப்படி அது வெளியில வரும், சொல்லு?"
அந்த கை கீழே சரிந்து என்னிடம் நெருங்கியது. முற்களும் அந்த கையின் மென்மையைக் கண்டு வியந்து அழகு ரசிக்கும் விதத்தில் அந்த கையை ஆசையாக சாய்ந்து சாய்ந்து தொட்டு வணங்கியது. ஒவ்வொரு முள்ளும் அவனை படும் பொழுது, "ஸ்!" என்று ஒரு மெல்லிய சத்தம் விட்டுவிட்டு, தன் தம்பியை சமாளிக்க சிரித்தான். என்னை பற்றி வெளியே இழுத்தான். அவனின் கண்களை சிமிட்டி தம்பியிடம் என்னை தூக்கிப் போட்டான்.

"பந்தை காப்பாத்திட்டேன் பாத்தியா?"
"ஆமாம். உன் கையை பாரு."
"எனக்கு கொஞ்ச முள்ளு தான்." என்னை திரும்பி வாங்கிக் கொண்டு, கீழே தரையில் உட்கார்ந்து என்னை தன் தாமரைக் கைகளில் சுற்றி சுற்றி ஆராய்ந்தான். "இதுக்கு பாரு, எவ்ளோ முள்ளு! பாவம்."
"எப்படி அங்கே போய் விழுந்ததோ..."

இளங்கோவின் கேள்வியில் தான் இந்த இருவரின் மாய வலையிலிருந்து வெளி வந்தேன். என் உரிமையாளர், என் அருமை இளவரசி, என் ஜானகி எங்கே காணவில்லை?!

"யாருடா அது? நந்தவனத்தக்குள்ள..."
கருமேனியன் என்னிடம் இருந்த முற்களை மெல்ல மெல்ல எடுத்துக் கொண்டு மேலே குரல் வந்த திசையை நோக்கினான். இளங்கோவிற்கு முன் வந்து நின்றாள் மிலி. அவளின் குழப்பம் மிகுந்த முறைப்பிற்கு பதிலாக அவனும் முறைத்தான்.
"உங்க விருந்தாளிங்களை இப்படித்தான் வாடா போடான்னு கூப்பிடுவீங்களா?"
"இளங்கோ!" அண்ணன் எழுந்து அவனை முறைத்து பார்த்தான். "அவமரியாதையா பேசக் கூடாதுன்னு நம்ம ஆசிரியர் எவ்ளோ தடவை உன்கிட்ட தனியா சொல்லியிருக்காரு?" 
அவன் மிலியை திரும்பிப் பார்த்தான்.
"தம்பிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்..." என்று தொடங்கியவன் பின்னால் நடந்து வந்துகொண்டிருப்பவளை கண்டு கண்கள் விரிந்து என்னை இன்னமும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். முற்செடியை தாண்டி அவளிடம் மெல்ல நடந்து சென்றான். அவள் தன் கைகளை அவளின் பின்னால் கோர்த்துக் கொண்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனை மேலே நோக்கி பார்த்தாள். 

"உங்க பந்தா?"
"ஆமாம்." 

இரண்டு நீல தாமரை புஷ்பங்களிடம் இருந்து இரண்டு சிகப்பு தாமரை புஷ்பங்களிற்குள் செலுத்தப் பட்டேன். எது யாருடையது என்று வண்ணங்களை வைத்துத்தான் கண்டுகொள்ள முடிந்தது!

"முற்செடியிலிருந்து வெளியில எடுத்து கொடுத்ததுக்கு மிகவும் நன்றி..."
"பரவாயில்லை..." அவன் சொல்ல வந்ததை அவசரமாக முழுங்கிய விதம் அவன் என்ன சொல்ல வந்தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்தது. 

"உனக்காக நான் எதுவேனும்நாலும் செய்வேன்."

ஜானகி குனிந்த தலை நிமிராமல் என்னை பார்த்து பேசினாள்.
"எனக்காக இன்னொரு காரியம் செய்ய முடியுமா?"
அவன் அவளின் கண்களை உற்று நோக்க முயற்சிக்க, தன் தலையை அழகாக கீழே சாய்த்து அவளை பார்த்தான்.
"சொல்லேன்."

அவள் தன் கண்களை நிமிர்ந்து அவனின் கண்களுக்குள் தன் உள் கிடந்த உணர்வுகளை ஊற்றினாள். ஏதோ கண்கள் பேசிய விதம் ஒரே சமயத்தில் இருவரின் முகங்களில் இரு பெரிதான விரிந்த புன்னகைகள் மலர்ந்தன.

"எனக்காக ஒரு வில்லை தூக்கனும்..."
அவன் தலையை அசைத்து, தோள்களை குலுக்கினான்.
"தூக்கிட்டா போச்சு."

Comments

Popular posts from this blog

ஜாக்கிரதை!

Dharam Yuddh - 4

Dharam Yuddh - 5